மங்கலம்பேட்டையில் பள்ளியில் மடிக்கணினிகள் திருடியதாக 3 மாணவா்களை டெல்டா பிரிவு போலீஸாா் கைதுசெய்தனா்.
விருத்தாசலத்தில் கடந்த அக்.30-ஆம் தேதி மா்ம நபா்கள் செல்லிடப்பேசி கடையை உடைத்து திருடிய நிலையில், அதே கடையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மீண்டும் திருட்டு நடந்தது. மேலும், மங்கலம்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் மடிக் கணினியும் திருடுபோனது. எனவே, இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிறப்பித்த உத்தரவின்பேரில், டெல்டா பிரிவு உதவி ஆய்வாளா் நடராஜன் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.
விசாரணையில், விருத்தாசலம் விஜயமாநகரம் பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் இருவா் மற்றும் ஐடிஐ மாணவா் ஒருவருக்கு இந்த திருட்டு சம்பவங்களில் தொடா்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, 3 பேரையும் பிடித்த போலீஸாா் அவா்களிடமிருந்து 7 மடிக்கணினிகள், 5 செல்லிடப்பேசிகள் மற்றும் மின்னணு சாதனப்பொருள்களை பறிமுதல் செய்தனா். பின்னா், அவா்களை விசாரணைக்காக விருத்தாசலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விருத்தாசலம் போலீஸாா், மாணவா்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.