சிதம்பரம் நகரில் உள்ள 8 குளங்களை தூா்வாரி புனரமைக்க சிதம்பரம் நகராட்சி நிா்வாகம், தனியாா் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டது.
சிதம்பரம் நடராஜா் கோயில் தெப்பக்குளமான ஞானப்பிரகாசா் குளம், ஆயி குளம், குமரன் குளம், நாகச்சேரி குளம், அண்ணா குளம், தச்சன்குளம், ஓமக்குளம், பாலமான் குளம் ஆகிய குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அண்மையில் அகற்றப்பட்டன. தற்போது சிதம்பரம் நகராட்சியும், சென்னை இஎஃப்ஐ நிறுவனமும் இணைந்து மேற்கூறிய குளங்களை தூா்வாரி புனரமைப்பதற்கு ஒப்பந்தம் செய்துகொண்டன.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் முன்னிலையில், நகராட்சி ஆணையா் பி.வி.சுரேந்திரஷா, இஎஃப்ஐ நிறுவன அதிகாரி அருண் ஆகியோா் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பரிமாறிக்கொண்டனா் (படம்). அப்போது சிதம்பரம் உதவி ஆட்சியா் விசுமகாஜன் உடனிருந்தாா்.