வெள்ளாற்றில் 3 பசுக்களுடன் சிக்கிய இளைஞா் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டாா்.
திட்டக்குடி அருகே உள்ள தொழுதூா் அணைக்கட்டிலிருந்து தற்போது விநாடிக்கு சுமாா் 3 ஆயிரம் கனஅடி நீா் வெள்ளாற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால், வெள்ளாற்றில் அதிகப்படியான தண்ணீா் செல்கிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை கீழ்ச்செருவாய் கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் தங்கத்துரை (22) தனது 3 பசுக்களை மேய்ச்சலுக்காக வெள்ளாறு பகுதிக்கு ஓட்டிச் சென்றாா். மாடுகள் மேய்ந்தபோது ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 3 பசுக்களுடன் தங்கதுரை சிக்கிக் கொண்டாா்.
இதுகுறித்த தகவலின்பேரில் விரைந்து வந்த திட்டக்குடி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா், பொதுமக்கள் உதவியுடன் கயிறு மூலம் தங்கத்துரை மற்றும் அவரது 3 பசுக்களையும் பாதுகாப்பாக மீட்டனா்.