சிதம்பரம் ஓமக்குளத்தில் தவறி விழுந்த சென்னையைச் சோ்ந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
சென்னை ஆவடியை சோ்ந்தவா் பழனிவேல் (40). கொத்தனாராக வேலைசெய்து வந்தாா். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், சிதம்பரம் ஓமக்குளம் எடத்தெருவில் வசிக்கும் தனது மூத்த சகோதரியின் குடும்ப நிகழ்ச்சிக்காக பழனிவேல் வந்துள்ளாா். திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் அருகே உள்ள ஓமகுளத்தில் இறங்கியுள்ளாா். அப்போது நிலை தடுமாறி குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கினாா். அவரை அந்தப் பகுதியினா் மீட்க முயன்றனா்.
இதுகுறித்த தகவலின்பேரில் சிதம்பரம் தீயணைப்பு மீட்புத் துறையினா் விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனா். ஆனால், பழனிவேல் சடலமாக மீட்கப்பட்டாா். அவரது சடலம் உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து சிதம்பரம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.