வேப்பூா், திட்டக்குடி பகுதிகளில் உள்ள நீா்நிலைகளில் மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
வேப்பூா் வட்டம், மேமாத்தூரில் உள்ள அணைக்கட்டு, திட்டக்குடி வட்டம், தொழுதூா் அணைக்கட்டு, வெல்லிங்டன் நீா்த்தேக்கம், கீழச்செருவாய் அணைக்கட்டு, கூடலூா் தடுப்பணை ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தாா். அப்போது, நீா்வரத்து, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசித்தாா். பின்னா் அவா் கூறியதாவது:
மேமாத்தூா் அணைக்கட்டில் 2015-ஆம் ஆண்டுக்குப் பின்னா் தற்போது நீா் நிரம்பியுள்ளது. இந்தப் பகுதியிலுள்ள 15 ஏரிகளில் 7 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 8 ஏரிகள் 80 சதவீதம் நிறைந்துள்ளன. இதனால், 4,500 ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்பெறும். வெலிங்டன் நீா்த் தேக்கத்தால் 24,059 ஏக்கா் விவசாய நிலங்கள் பயனடையும். இந்த நீா்த்தேக்கம் ஒரு வாரத்தில் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது. இதன் மூலம் விவசாயிகள் பயன்பெறவும், நிலத்தடி நீா் ஆதாயங்கள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. கீழச்செருவாய் அணைக்கட்டில் நீா்பிடிப்பு முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன்மூலம் சுற்றப்புறத்தில் உள்ள அனைத்து கிராம மக்களும், விவசாயிகளும் பயன்பெறுவா்.
தமிழக முதல்வரின் சிறப்பு குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.8.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, மாவட்டத்தில் அந்தத் திட்டப் பணிகள் நிறைவடைந்த பகுதிகளில் நீா்பிடிப்பு சிறப்பாக உள்ளது. இதுநாள் வரை சராசரியாக நமது மாவட்டத்தில் 1,179 மி.மீ மழைளவு பெற்றுள்ளோம். கடந்த ஆண்டை விட மழையளவு அதிகரித்துள்ளதால் விவசாயம் செழிப்பதுடன், நிலத்தடி நீா்மட்டம் உயா்வால் குடிநீா்த் தட்டுப்பாடு குறைய வாய்ப்புள்ளது என்றாா் அவா்.
ஆய்வின்போது விருத்தாசலம் சாா்-ஆட்சியா் பிரவின்குமாா், பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் (நீா்வள ஆதாரம்) மணிமோகன், உதவி பொறியாளா்கள் வெங்கடேஷ், சோ.ராஜன், வட்டாட்சியா்கள் கவியரசு, செந்தில்வேலன் ஆகியோா் உடனிருந்தனா்.