கடலூரில் சிங்காரவேலர் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் சாகர்மாலா திட்டம் குறித்து பேசுவதற்கு காவல் துறையினர் திடீரென கட்டுப்பாடு விதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
"சிந்தனைச் சிற்பி' என்றழைக்கப்படும் சிங்காரவேலரின் 79-ஆவது நினைவு நாள் பொதுக்கூட்டத்துக்கு மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பினர் கடலூரில் ஏற்பாடு செய்தனர். திங்கள்கிழமை மாலையில் தாழங்குடா மீனவர் கிராமத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக, காவல்துறையில் அனுமதி கோரியிருந்தனர். முதலில் அனுமதி வழங்கிய காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென பொதுக்கூட்டத்துக்கு தடை விதித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அமைப்பின் நிர்வாகிகள் காவல் துறையிடம் விளக்கம் கேட்டபோது, சாகர் மாலா திட்டத்துக்கு எதிராக பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனராம். பின்னர், காவல் துறை வற்புறுத்தலின்பேரில், சாகர் மாலா திட்டம் குறித்து பேச மாட்டோம் என அந்த அமைப்பினர் எழுதிக்கொடுத்துவிட்டு பொதுக்கூட்டத்தை நடத்தினர். கூட்ட நிகழ்வுகள் அனைத்தையும் காவல் துறையினர் விடியோ மூலம் பதிவு செய்தனர்.
கூட்டத்துக்கு அமைப்பின் நிறுவனர் ரா.மங்கையர்செல்வன் தலைமை வகித்துப் பேசினார். இணைப் பொதுச் செயலர் கோ.வெங்கடேசன், மாநில செய்தித் தொடர்பாளர் கோ.திருமுகம், துணைப் பொதுச் செயலர் ச.ரமேசு, கருத்து பரப்புரை செயலர் வீ.தங்கதுரை, மாவட்ட பொருளாளர் ந.உதயக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.