கடலூர் மாவட்டத்துக்கு 4 கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
கடலூர் வருவாய் மாவட்டக் கல்வித் துறையைப் பொருத்தவரை கடலூர் மற்றும் விருத்தாசலம் கல்வி மாவட்டங்களாக இருந்தன. பின்னர், கடலூர், விருத்தாசலம், வடலூர், சிதம்பரம் கல்வி மாவட்டங்களாக மாற்றி அமைக்கப்பட்டு, 4 கல்வி மாவட்டங்கள் இயங்கி வருகிறது. புதிய கல்வி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்ட போதும், மாவட்டக் கல்வி அலுவலர்கள் நியமிக்கப்படாமல் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், புதிய கல்வி மாவட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.
அதன்படி, கடலூர் மாவட்டக் கல்வி அலுவலராக ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) கூடுதல் திட்ட ஒருங்கிணைப்பாளர் ப.சுந்தரமூர்த்தி நியமிக்கப்பட்டார். தற்போது பொறுப்பு வகித்து வரும் என்.ஜி.செல்வராஜ் பதவி உயர்வு பெற்று அரியலூர் மாவட்டக் கல்வி அலுவலராகப் பொறுப்பேற்றுள்ளார்.
விருத்தாசலம் கல்வி மாவட்ட அலுவலர் பொறுப்பிலிருக்கும் வேப்பூர் தலைமை ஆசிரியர் செல்வகுமார் அதிலிருந்து விடுவிக்கப்பட்டு, கன்னியாகுமரி மாவட்டம், பால்குளம் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் கே.ராமச்சந்திரன் நாயர் பதவி உயர்வில் அந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
வடலூர் கல்வி மாவட்ட அலுவலராக கடலூர் மாவட்டம், திருவாமூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எம்.ரோஸ் பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்கிறார். இந்தப் பொறுப்பை வகித்து வந்த வடலூர் மகளிர் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திருமுகம் மீண்டும் அதே பணியிடத்துக்குச் செல்கிறார்.
சிதம்பரம் கல்வி மாவட்டத்தின் பொறுப்பு அலுவலரான வெங்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சுவாமிமுத்தழகன் மீண்டும் பள்ளிப் பொறுப்புக்குச் செல்கிறார். அவருக்குப் பதிலாக விழுப்புரம் மாவட்டம், நயினார்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.ராஜேந்திரன் அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.