பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு கடலூர் மாவட்ட கிளையினர் வெள்ளிக்கிழமை மாலை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நில அளவைத் துறை மூலம் நடைபெறும் அனைத்து பட்டா மாறுதல் பணிகளும் (முழு புலம் மற்றும் உள்பிரிவு புலன் எல்லை அளத்தல் பணி) கிராம நிர்வாக அலுவலர்களின் தலையீடு இன்றி நில அளவர்கள் மூலமாகவே நடைபெற வேண்டும். விலை மதிப்பு மிக்க நகர புலங்களில் நில அளவர் சார்-ஆய்வாளர் நிலையில் விதிமுறைகளுக்கு மாறாக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்க நினைக்கும் உத்தரவுகளை ஆரம்ப நிலையிலேயே கைவிட வேண்டும்.
கூடுதல் இயக்குநர்(பொது) பதவியை சுழற்சி முறையில் வழங்கும் முன்மொழிவை கைவிட வேண்டும். தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் முன்மொழிவுகளை முற்றிலும் கைவிட வேண்டும். ஆய்வாளர் துணை ஆய்வாளர் பணியிடங்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்.
மாநிலம் முழுவதும் மாவட்டங்களில் ஆய்வாளர் நிலையில் உள்ள நேர்முக உதவியாளர் பதவி உருவாக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அமைப்பின் மாவட்ட தலைவர் குணசேகரன், மாவட்ட செயலர் வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 7-ஆம் தேதி முதல் நில அளவை துறையின் நில அளவர் முதல் ஆய்வாளர்
வரை அனைவரும் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.