பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் இந்திய மருத்துவர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவ சேவையை சீர்குலைக்கும் நுகர்வோர் பாதுகாப்பு மன்ற திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும். மக்கள் விரோத தேசிய மருத்துவ சபை மசோதாவை திரும்பப் பெற வேண்டும்.
இந்திய மருத்துவக் கழக திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட இந்திய மருத்துவர் சங்கத்தினர் கடலூரில் தனியார் மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார். செயலர் கேசவன், மருத்துவர்கள் கிருஷ்ணமூர்த்தி, நடராஜன், பாண்டியன், பாலு உள்ளிட்டோர் கோரிக்கை அட்டைகளை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.