பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ், ஏழைக் குடும்பத்தினருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் விழா, பண்ருட்டி செட்டித் தெருவில் உள்ள தனியார் கேஸ் ஏஜென்சி அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, ஏஜென்சி உரிமையாளர் ஆர்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார், மேலாளர் கே.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் தஞ்சாவூர் மண்டல முதன்மை மேலாளர் எஸ்.செல்வராஜ் கலந்துகொண்டு, 100 ஏழை குடும்பத்தினருக்கு இலவச எரிவாயு இணைப்புகளை வழங்கினார்.
முன்னதாக அவர் பேசியதாவது: இந்தியாவில் 2014-ஆம் ஆண்டு வரை 13 கோடி பேர் எரிவாயு இணைப்பு பெற்றிருந்தன. பிரதமரின் உஜ்வாலா திட்டம் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 13 கோடி குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது, 90 சதவீதம் பேர் எரிவாயு உருளைகளை பயன்படுத்தி வருகின்றனர். எஞ்சியுள்ள 10 சதவீதம் பேருக்கும் 2019-ஆம் ஆண்டு மே மாதத்துக்குள் எரிவாயு இணைப்பு வழங்கப்படும். ஏழை மக்கள் பயன்படுத்தும் வகையில் 5 கிலோ எடை கொண்ட எரிவாயு உருளை ரூ.268-க்கு விற்கப்படுகிறது. இதற்கான மானியம் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் என்றார் அவர்.