கடலூர் மாவட்டம், நெய்வேலியில் கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக அவரது காதலர் உள்பட 4 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
விருத்தாசலம் வட்டத்தைச் சேர்ந்த 18 வயதுப் பெண் நெய்வேலியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இவரும், நெய்வேலி அருகே உள்ள ஊத்தங்கால், நடுத் தெருவைச் சேர்ந்த கஜேந்திரன் மகன் விஜய் (23) என்பவரும் காதலித்து வந்தனராம். கடந்த புதன்கிழமை வழக்கம்போல அந்த மாணவி கல்லூரிக்குச் சென்றார். பின்னர், அந்த மாணவியை விஜய் பைக்கில் அழைத்துச் சென்றாராம்.
ஆதண்டார்கொல்லை அருகே தைலமரக் காட்டுக்குள் மாணவியை அழைத்துச் சென்ற விஜய், அங்கு அவரைப் பாலியல் பலாத்காரம் செய்தாராம். அப்போது, அங்கு வந்த மேலும் 3 பேரும் மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனராம். இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினராம். இதுகுறித்து அந்த மாணவி வெள்ளிக்கிழமை அளித்த புகாரின் பேரில், நெய்வேலி தெர்மல் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து, டிஎஸ்பி சரவணன் தலைமையிலான போலீஸார் விஜயிடம் விசாரணை நடத்தியதில், வடக்குவெள்ளூர், செட்டிக்குளம் தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் முரளி (18), அதே பகுதியைச் சேர்ந்த சின்னதுரை மகன் பிரபுராஜ் (22), சாரங்கம் மகன் வேல்முருகன்(20) ஆகிய தனது நண்பர்களுடன் இணைந்து மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீஸார் கைதுசெய்து சிறையிலடைத்தனர். கைதான விஜய்க்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.