சபரிமலை ஐயப்பன் கோயிலின் புனிதத்தை சீர்குலைக்க கம்யூனிஸ்ட்டுகள் முயற்சிப்பதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றஞ்சாட்டினார்.
கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டையில் பஜ்ரங்கி சேவாலயம் சார்பில் ஸ்ரீராமபக்த பஞ்சமுக ஆஞ்சநேயர் தியான பீடத்தில் 4-ஆம் ஆண்டு அனுமன் ஜயந்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவை இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தொடக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மங்கலம்பேட்டையில் 96 அடி உயர பஞ்சலோக ஆஞ்சநேயர் சிலை அமைய உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலின் புனிதத்தை சீர்குலைக்க கம்யூனிஸ்டுகள் முயற்சிக்கின்றனர். எனவே, அந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பவர்களை திருவாரூர் இடைத் தேர்தலில் தோற்கடிப்பதே எங்களின் நிலைப்பாடு. ரஜினியின் ஆன்மிக அரசியலை ஆதரிக்கிறோம். தமிழகத்தில் போட்டி அரசை திராவிட கட்சிகள், கம்யூனிஸ்டுகள், நக்சலைட்டுகள் நடத்தி வருகிறார்கள் என்றார் அவர்.