தலைக் கவசம் அணிந்து வாகனம் ஓட்டியவர்களுக்கு திருக்குறள் புத்தகத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் பரிசளித்தார்.
கடலூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டும் அனைத்து காவலர்களும் கண்டிப்பாக தலைக் கவசம் அணிய வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் அண்மையில் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, விபத்தில் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுத்திட பொதுமக்கள் தலைக் கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார். இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடலூர் பேருந்து நிலையம் அருகே காவல் துறை, ஊர்க்காவல் படையினர் சாலைப் பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு திங்கள்கிழமை நிறுத்தப்பட்டிருந்தனர்.
அப்போது, தலைக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் வழங்கி, கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டுமென வலியுறுத்தினார். அதே நேரத்தில், தலைக் கவசம் அணிந்து வாகனம் ஓட்டியவர்களை பாராட்டும் விதமாக அவர்களுக்கு இனிப்புடன் துண்டு பிரசுரமும், திருக்குறள் புத்தகத்தையும் காவல் கண்காணிப்பாளர் பரிசளித்தார்.
நிகழ்ச்சியில் ஊர்க்காவல் படை வட்டார தளபதி சுரேந்திரகுமார், வட்டார துணைத் தளபதி ஜெயந்தி ரவிச்சந்திரன், கோட்ட தளபதி ராஜேந்திரன், தளபதிகள் தண்டபாணி, சிவப்பிரகாசம், சத்யா மற்றும் ஊர்க்காவல் படையினர் பங்கேற்றனர். இதேபோல நகரின் முக்கியப் பகுதிகளில்
விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு ஊர்காவல் படை வீரர்கள் ஒரு வாரம் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.