கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் ரௌடி ஒருவர் திங்கள்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக அவரது நண்பர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
பண்ருட்டி, அவுலியா நகரைச் சேர்ந்தவர்கள் பக்கிரிமுகமது (46). டைவர்ஷன் சாலையைச் சேர்ந்தவர் ஜியாவுதீன்(48). நண்பர்களான இருவரும் வழிப்பறி, திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாக அவர்கள் மீது காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருவருக்கும் திருமணமாகவில்லையாம்.
பக்கிரிமுகமது, ரேவதி என்ற பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தாராம். அந்தப் பெண்ணை ஜியாவுதீன் அழைத்துச் சென்று உளுந்தூர்பேட்டையில் குடும்பம் நடத்தி வந்த நிலையில், கடந்த 10ஆண்டுகளுக்கு முன்னர் ரேவதி இறந்து விட்டாராம். அவரை, ஜியாவுதீன் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், பக்கிரிமுகமதுக்கும், ஜியாவுதீனுக்கும் முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில், பக்கிரிமுகமது, மது அருந்த ஜியாவுதீனை திங்கள்கிழமை இரவு அழைத்தார். இருவரும் பண்ருட்டி, பனங்காட்டுத் தெரு அருகே விவசாய நிலத்தில் மது அருந்தினர். அப்போது, பக்கிரிமுகமது திடீரென கத்தியால் ஜியாவுதீனை தலையில் தாக்கினார். இதில் அவர் தலையில் காயமடைந்தார். இருப்பினும், சுதாரித்துக்கொண்ட ஜியாவுதீன், அதே கத்தியை பறித்து பக்கிரிமுகமதுவை வெட்டினார். இதில் பக்கிரிமுகமது நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், ஜியாவுதீன் உடலில் காயங்களுடன் பண்ருட்டி காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சரணடைந்தார். போலீஸார் அவரை சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், போலீஸார் பக்கிரிமுகமது சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து பண்ருட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜியாவுதீன் தீவிர சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.