வடலூர் தைப்பூச விழா ஏற்பாடுகளில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது.
கடலூர் கிழக்கு மாவட்ட பாமக செயற்குழு கூட்டம் கடலூரில் மாவட்ட செயலர் சண்.முத்துகிருஷ்ணன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில், மாநில வன்னியர் சங்கச் செயலர் பு.தா.அருள்மொழி, கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் பழ.தாமரைக்கண்ணன், அமைப்புச் செயலர் பி.ஆர்.பி.வெங்கடேசன், மாநில முன்னாள் துணைப் பொதுச் செயலர் அ.தர்மலிங்கம், வன்னியர் சங்க துணைத் தலைவர் தனசேகர், மாநில செயற்குழு உறுப்பினர் போஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், கட்சியின் போராட்டத்துக்குப் பிறகும் என்எல்சி நிர்வாகம் சுரங்க விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை கைவிடவில்லை எனில் மீண்டும் மாவட்டம் தழுவிய போராட்டம் நடத்துவது. வருகிற மக்களவைத் தேர்தலில் கட்சி அமைக்கும் கூட்டணி வெற்றி பெற பாடுபடுவது.
வடலூரில் நடைபெறும் தைப்பூச திருவிழாவுக்கான பாதுகாப்பு மற்றும் விரிவான ஏற்பாடுகளில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும். இதையொட்டி, பண்ருட்டி-சேத்தியாத்தோப்பு இடையே சாலையை விரைந்து அமைக்க வேண்டும். வடலூர் தர்ம சாலைக்கு தென்புற பகுதியில் சுகாதாரச் சீர்கேடு நிலவுவதை தடுக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்
பட்டன.
கூட்டத்தில், மாணவரணி செயலர் கோபி, இளைஞரணி துணைச் செயலர் சந்திரசேகர், துணைத் தலைவர் இள.விஜயவர்மன், இளைஞரணி தலைவர் வாட்டர்மணி, செய்தி தொடர்பாளர் ந.சத்யா, நிர்வாகி ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக நகர தலைவர் மதி வரவேற்க, பாரதி நன்றி கூறினார்.