தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டுமென ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார்.
ஒருமுறை உபயோகப்படுத்தப்பட்டு, தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களை ஜனவரி 1 -ஆம் தேதி முதல் பயன்படுத்தக் தமிழக அரசு தடை விதித்தது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நெகிழி (பிளாஸ்டிக்) மாசு இல்லா தமிழ்நாடு என்ற நோக்கத்தை தமிழக முதல்வர் முன்னெடுத்து அதற்காக தனி இலட்சினை, இணையதளம், செல்லிடப்பேசி செயலி, விழிப்புணர்வுக் குறும்படம் ஆகியவை மூலமாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், உள்ளாட்சி அமைப்புகள், வணிக நிறுவனங்களுக்கும் பல்வேறு அமைப்புகள் மூலமாக விளக்கக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
தமிழகத்தில் உள்ள நெகிழிப் பொருள்கள் உற்பத்தியாளர்கள், மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள், வணிகர்கள், அனைத்து விற்பனையாளர்கள், பொதுமக்கள் தங்களிடமுள்ள தடை செய்யப்பட்ட வெகிழிக் பொருள்களைச் சேகரித்து வைக்காமல், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் (மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி) ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு உள்ளாட்சி அமைப்புகள், பதிவு செய்யப்பட்ட மறுசுழற்சி நிறுவனங்களிடம் ஒப்படைப்பதன் மூலம் பாதுகாப்பான முறையில் மறுசுழற்சி செய்ய தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். நெகிழிப் பொருள்கள் மாசில்லா தமிழ்நாடு உருவாக அனைவரும் ஆதரவு தர வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.