கடலூர் கடற்கரைப் பகுதியில் அருவாமூக்கு திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள், மீனவர்களால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் திட்டம் அருவாமூக்குத் திட்டம். பெருமாள் ஏரியிலிருந்து வெளியேறும் மழைநீர் பரவனாறு வழியாக கடலூர் துறைமுகத்துக்குச் சென்று அதன்பின்னர் கடலில் சென்றடைகிறது. அவ்வாறு கடலில் சென்று சேரும் இடத்தில் அடிக்கடி மண் மேடிடுவதால் தண்ணீர் வடிய முடியாமல் விவசாயிகளும், படகுகள் செல்ல முடியாமல் மீனவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, அருவாமூக்கு போன்ற வடிவில் அந்தப் பகுதியில் ஒரு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் பெருமாள் ஏரியிலிருந்து, பரவனாறு வழியாக நீர் கடலில் கலக்கும் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைக் காலங்களில் மழைநீர் உடனடியாக வடிகால் வாய்க்கால் மூலம் வெளியேற்றப்பட்டு கடலுக்கு சென்றடைவதற்கு இந்தத் திட்டத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் மூலம் உரிய முன்மொழிவுகள் அரசு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பணித் துறை அலுவலர்கள் ஆட்சியரிடம் தெரிவித்தனர்.
அதன்பேரில் இந்தத் திட்டத்தை செயல்படுத்திட உரிய முறையில் நடவடிக்கை எடுக்குமாறு பொதுப் பணித் துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். அதன்பின்னர் பெரியக்குப்பம் பகுதியில் உள்ள அருவாமூக்கு பகுதியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நஞ்சலிங்கம்பேட்டை பகுதியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது கடலூர் சார்-ஆட்சியர் (பொ) வீ.வெற்றிவேல், பொதுப் பணித் துறை செயற்பொறியாளர் சாம்ராஜ் (சிதம்பரம்), உதவி செயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர் சண்முகம், கடலூர் வட்டாட்சியர் பா.சத்தியன், வருவாய்த் துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள்
உடனிருந்தனர்.