பேருந்து கண்ணாடி உடைப்பு வழக்கில் கைதானவர், தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
பண்ருட்டி - கும்பகோணம் சாலையில் காடாம்புலியூர் பகுதியில் கடந்த டிச.11-ஆம் தேதி தொடர்ச்சியாக அரசு, தனியார் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டஸ். இதில், சுமார் 10 பேருந்துகளின் கண்ணாடிகள் சேதமடைந்தன. இதுதொடர்பாக, காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். காவல் ஆய்வாளர் மலர்விழி விசாரணை மேற்கொண்டு இந்த வழக்குகள் தொடர்பாக வடக்குத்து காந்திநகரைச் சேர்ந்த விஜயஆனந்த் மகன் நவீன் (21) உள்பட 3 பேரை கைது செய்தனர்.
இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதுவது போன்று அரசுப் பேருந்து சென்றதால் அந்த ஆத்திரத்தில் பேருந்துகளின் கண்ணாடியை உடைத்ததாக தெரிவித்தனர். எனவே, நவீனின் குற்றசெய்கையை கட்டுப்படுத்தும் நோக்கில், அவரை தடுப்புக் காவலில் கைது செய்திட மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட எஸ்பி ப.சரவணன் பரிந்துரைத்தார். அதன்பேரில் அதற்கான உத்தரவை ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்டதைத் தொடர்ந்து, நவீன் ஓராண்டுக்கு சிறையில் அடைக்கும் வகையில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் ஏற்கெனவே, கைது செய்யப்பட்ட சிவசங்கர், சத்தியராஜ் ஆகியோரும் தடுப்பு காவலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.