அரசுப் பள்ளி மேற்கூரையில் காரை பெயர்ந்து விழுந்தது
பெண்ணாடம் அருகே அரசுப் பள்ளியில் மேற்கூரையிலிருந்து வெள்ளிக்கிழமை திடீரென காரை பெயர்ந்து விழுந்தது. மாணவர்கள் காயமின்றித் தப்பினர்.
பெண்ணாடம் அருகே உள்ள நந்திமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், 31 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளிக் கட்டடம் பழைமை வாய்ந்ததாக சிதிலமடைந்த நிலையில் உள்ளது. கட்டடம் முழுவதும் ஆங்காங்கே விரிசல் காணப்படுகிறது.
வெள்ளிக்கிழமை காலை வழக்கம்போல பள்ளி தொடங்கி வகுப்புகள் நடைபெற்றன. அப்போது, பள்ளியின் முன்பக்க வராண்டாவில் கான்கிரீட் மேற்கூரையிலிருந்து காரைகள் திடீரென பெயர்ந்து கீழே விழுந்தன. அப்போது, வகுப்பறைக்குள் மாணவ, மாணவிகள் அமர்ந்திருந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுகுறித்து தகவலறிந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர் பள்ளியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ஆசிரியர்கள் அங்கிருந்த மாணவ, மாணவிகளை பாதுகாப்பு கருதி அருகே உள்ள திரெளபதி அம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்று வகுப்புகளை நடத்தினர். எனவே, மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி சேதமடைந்த பள்ளிக் கட்டடத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் அல்லது புதிய வகுப்பறை கட்டடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.