கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்கக் கோரி விருத்தாசலத்தில் விவசாயிகள் 6-ஆவது நாளாக சனிக்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், பெண்ணாடம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் தங்களது கரும்புகளை எ.சித்தூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு அரவைக்கு வழங்குகின்றனர். ஆனால், ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்புக்கான தொகையை கடந்த 2 ஆண்டுகளாக வழங்கவில்லையாம். இதைக் கண்டித்தும், நிலுவைத் தொகையை வழங்கக் கோரியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் விருத்தாசலம் பாலக்கரையில் கடந்த 7-ஆம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தப் போராட்டம் 6-ஆவது நாளாக சனிக்கிழமையும் தொடர்ந்தது. போராட்டத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்களிடம் சார்-ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், காவல் உதவி கண்காணிப்பாளர் தீபாசத்தியன், வட்டாட்சியர் கவியரசு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.