பண்ருட்டி நகராட்சி ஊழியர்களுக்கு டிசம்பர் மாதம் ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பண்ருட்டி நகராட்சியின்கீழ் ஊழியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த பல மாதங்களாக ஊதியம் காலதாமதமாக வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
பொங்கல் பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும் நிலையில் டிசம்பர் மாதத்துக்கான ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், நகராட்சி ஊழியர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாத நிலையில் பரிதவித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஊழியர்கள் தரப்பில் கூறியதாவது: நகராட்சி வரி வசூல் பணம் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டு விடுகிறது. ஊழியர்களுக்கு தொடர்ந்து காலதாமதமாகவே ஊதியம் வழங்கப்படுகிறது. கடந்த தீபாவளி பண்டிகையின்போதும் இதே நிலைதான் என்றனர்.
இதுகுறித்து பண்ருட்டி நகராட்சி ஆணையர் (பொ) வெங்கடாசலம் கூறுகையில், நகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டுவிட்டது. எஞ்சியவர்களுக்கும் விரைவில் ஊதியம் வழங்கப்படும் என்றார்.