கடலூரில் ஊர்க்காவல் படை தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
காவல் துறையினரோடு இணைந்து பல்வேறு பாதுகாப்பு பணிகள், போக்குவரத்து சீரமைத்தல், கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளில் ஊர்க்காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, கடலூர் மாவட்டத்தில் 391 பேர் ஊர்க்காவல் படையில் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இவர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் வகையில் கடலூரில் உள்ள காவலர் நல மண்டபத்தில் ஊர்க்காவல் படை தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் தலைமை வகித்து, ஊர்க்காவல் படையினரின் செயல்பாடுகளை பாராட்டி பேசினார். மேலும், 2018-ஆம் ஆண்டில் சிறப்பாக பணியாற்றியதற்காக 129 பேருக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரா.வேதரத்தினம், துணைக் கண்காணிப்பாளர் சாந்தி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
ஊர்க்காவல் படையின் விழுப்புரம் சரக துணை தளபதி ஆர்.கேதார்நாதன், கடலூர் மாவட்ட வட்டார தளபதி ஆர்.சுரேந்தர்குமார், துணை வட்டார தளபதி ஜெயந்தி
ரவிச்சந்திரன் ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் ஊர்க்காவல் படையினரின் முதலுதவி, மீட்புப் பணிகள் தொடர்பான ஒத்திகை நடைபெற்றது. நிகழ்ச்சியில், படைத்தளபதிகள் சிவப்பிரகாசம், தண்டபாணி, கணபதி, வேதரத்தினம், தில்லைசேகர், குருநாராயணன், கே.சத்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கோட்டத் தளபதி ராஜேந்திரகண்ணன், எழுத்தர் ராமானுஜம் ஆகியோர் செய்திருந்தனர்.
தொடர்ந்து, ஊர்க்காவல் படையினருக்கு விருந்து வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தலைக் கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.