நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன பணியாளர்கள் கூட்டுறவு மற்றும் நாணயச் சங்கத்தின் 50-ஆவது ஆண்டு பொதுப் பேரவைக் கூட்டம் சங்க வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, பேரவைத் தலைவர் ஆர்.இந்திரா தலைமை வகித்தார். இயக்குநர் ஏ.ஆரோக்கியதாஸ் வரவேற்றார். இயக்குநர் எஸ்.கார்த்திகேயன் அஞ்சலி உரை நிகழ்த்தினார். துணைத் தலைவர் பி.மணிமாறன் துணை விதி திருத்தத்தை வாசித்தார். செயலர் ஜி.நடனசேகரன் ஆண்டறிக்கை வாசித்தார். முதுநிலை உதவியாளர்கள் ஜி.முத்து, ஏ.கணேசன் ஆகியோர் வரவு-செலவு மற்றும் எதிர்கால திட்ட அறிக்கையை வாசித்தனர். இயக்குநர்கள் ஆர்.தாமோதரன், எஸ்.கவிதா, எஸ்.ரேவதி, சு.லட்சுமனன், வீராசாமி, ஆ.அன்பழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், 2018-19-ஆம் நிதி ஆண்டுக்கான உத்தேச வரவு-செலவு திட்டம், சங்க மகளிர் பணியாளர்களுக்கு பேருகால விடுப்பை 9 மாதங்களாக உயர்த்தித் தருவது, கல்விக் கடன் ரூ.2 லட்சம் என்பதை ரூ.5 லட்சமாக உயர்த்தித் தருவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மு.அண்ணாதுரை நன்றி கூறினார்.