விருத்தாசலத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது இந்து மத சின்னமான நாமத்தை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்ட விவசாய சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பண்ருட்டி காவல் நிலையத்தில் இந்து மக்கள் கட்சியினர் அண்மையில் புகார் அளித்தனர்.
அந்தக் கட்சியின் கடலூர் மாவட்டத் தலைவர் ஆர்.எஸ்.தேவா அளித்த மனுவில், கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் கடந்த 8-ஆம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இந்து மத சின்னமான நாமத்தை நெற்றியிலும், வயிற்றிலும் அணிந்து கொண்டு, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு ஈடுபட்டார். இச்செயல் இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
புதுவை மாநிலத் தலைவர் மஞ்சினி, விழுப்புரம் மாவட்டச் செயலர் ராமநாதன், கடலூர் மாவட்டச் செயலர் சத்தியமூர்த்தி, பொருளாளர் புருஷோத்தமன், மாவட்ட இளைஞரணித் தலைவர் கார்த்தி, பொருளாளர் பாலச்சந்தர், அமைப்பாளர் சத்யராஜ், பண்ருட்டி நகர அமைப்பாளர் அன்பு, அண்ணாகிராமம் ஒன்றியச் செயலர் சக்திவேல், பண்ருட்டி ஒன்றியத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.