காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள பூவிழந்தநல்லூர் கிராமத்தில் சென்னை ராதா என்ஜினீயரிங் ஒர்க்ஸ் சார்பில் 35-ஆம் ஆண்டு பொங்கல் விழா மற்றும் பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் செவ்வாய், புதன்கிழமை ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன.
விழாவில் ராதா என்ஜினீயரிங் ஒர்க்ஸ் நிறுவனத்தின் தலைவர் வெங்கடேசன் அனைத்து சமுதாய மக்களுடன் சேர்ந்து பொங்கல் விழாவைக் கொண்டாடினார்.
பின்னர், கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கு தலா ரூ.200 வீதம் அனைவருக்கும் வழங்கினார். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற 650 பேருக்கு சில்வர் பாத்திரம், 18 பேருக்கு 2 கிராம் தங்கக் காசுகளும், 32 பேருக்கு தலா 1 கிராம் தங்கக் காசும், வெளி மாநிலத்தில் பணிபுரியும் நிறுவன ஊழியர்கள் 52 பேருக்கு தலா 1 கிராமும், 3 பேருக்கு அரை கிராமும், தமிழகத்தில் பணிபுரிபவர்களில் 46 பேருக்கு 40 கிராம் வெள்ளிக் காசுகளும் வெங்கடேசன் வழங்கினார்.
விழாவில் அவரது துணைவியார் ஞானம்பிகை, நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராதா செல்வி, நிர்வாக இயக்குநர் வி.ஆர்.செந்தில்குமார், கிராமத் தலைவர் ஆர்.பத்மநாபன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பி.திரிபுரசுந்தரி, ஆசிரியர் ஞானம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வியாழக்கிழமை (ஜன.17) விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் நபர்களுக்கு தங்கக் நாணயம் உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.