கடலூரில் ரெளடி எனக் கூறி பொதுமக்களை மிரட்டிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.
கடலூர், முதுநகர் மணிக்கூண்டு அருகே உள்ள டீ கடையில் புதன்கிழமை மாலை ஒருவர் ரெளடி எனக் கூறிக்கொண்டு மாமூல் கேட்டு அச்சுறுத்தியதாக போலீஸாருக்கு தகவல் சென்றது.
இதையடுத்து, விரைந்து வந்த முதுநகர் போலீஸார் அந்த நபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் முதுநகர் நரசிங்கராவ் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணராஜி மகன் சதீஷ்குமார்(30) என்பது தெரிய வந்தது.
இதுபோல, கடலூர், ரெட்டிச்சாவடி பேருந்து நிலையம் அருகில் பெரிய இருசாம்பாளையத்தைச் சேர்ந்த சக்திவேல் மகன் சந்திரன் (37) என்பவர் உருட்டுக்கட்டையுடன் சுற்றி வந்து போக்குவரத்துக்கு இடையூறு செய்து, பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் மிரட்டல் விடுத்தார், அவரை, ரெட்டிச்சாவடி போலீஸார் கைது செய்தனர்.
இருவர் மீதும் முறையே முதுநகர், ரெட்டிச்சாவடி காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.