நெய்வேலி அருகே காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 4 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். மேலும், தலைமறைவான 2 பேரைத் தேடி வருகின்றனர்.
நெய்வேலி, ஊ.மங்கலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் நடராஜன்.
இவர், சகக் காவலருடன் எலுமிச்சை கிராமம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சாராயம் விற்றுக்கொண்டிருந்த சுந்தரமூர்த்தி, பாலமுருகன் ஆகியோரை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
இதை அறிந்த சுந்தரமூர்த்தியின் நண்பர்கள் சரவணன், மதேஷ்குமார், கமலக்கண்ணன், குறிஞ்சி ஆகியோர் உதவி ஆய்வாளர் நடராஜனிடம் தகராறு செய்தனராம்.
மேலும், பைக்கை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்த உதவி ஆய்வாளர் நடராஜன் அளித்த புகாரின் பேரில் ஊ.மங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து சரவணன், மதேஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், தப்பியோடிய கமலக்கண்ணன், குறிஞ்சி ஆகியோரை தேடி வருகின்றனர்.
சாராய வியாபாரி சுந்தரமூர்த்தி மற்றும் பாலமுருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.