காணும் பொங்கலை முன்னிட்டு, கடலூர் வெள்ளிக் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் வியாழக்கிழமை மக்கள் கூட்டம் அலை மோதியது.
பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாள் காணும் பொங்கலை முன்னிட்டு, கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் மக்கள் கூட்டம் அலை மோதியது. கடலூர் உட்லாண்ட்ஸ் முதல் தேவனாம்பட்டினம் வரை சுமார் 3 கி.மீ தொலைவில் 10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டது. இரண்டு இடங்களில் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
விபத்தை தடுக்கும் வகையில் 6 இடங்களில் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. பொதுமக்களை கண்காணிக்க காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கடலில் குளிப்பதனால் ராட்சத அலை இழுத்துச் செல்லும் அபாயம் இருப்பதால் பொதுமக்களை கடலில் குளிக்க போலீஸார் அனுமதிக்கவில்லை. மேலும், ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து வந்தனர். கடற்கரை அருகே வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. உட்லாண்ட்ஸ் வழியாக செல்லும் வாகனங்கள் தேவனாம்பட்டினம் ஒருவழிப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டன.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் பரிந்துரையின் பேரில், துணை கண்காணிப்பாளர் சாந்தி தலைமையில், ஆய்வாளர் சரவணன் மேற்பார்வையில், 3 உதவி ஆய்வாளர்கள், 50 போலீஸார் உள்பட கடலோர காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.