சிதம்பரம் நகரில் போக்குவரத்து நெரிசல்மிக்க சாலையான போல்நாராயணன் தெருவில் சாலையை மறித்து பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் போல் நாராயணன் பிள்ளை தெரு உள்ளிட்ட சாலைகள், புதை சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக மிகவும் மோசமான நிலையில் இருந்தன. இதை சுட்டிக்காட்டி தினமணியில் செய்திகள் பலமுறை வெளியிடப்பட்டன.
மேலும், சமூக ஆர்வலர்களும் இது தொடர்பாக புகார் அளித்ததால், இந்தச் சாலை தற்போது தார்ச் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. சாலை அமைக்கப்பட்டு ஒரு வாரம்கூட ஆகவில்லை.
அதற்குள் அரசியல் கட்சி சார்பில் சாலையில் பள்ளம் தோண்டி, சாலையை முழுவதும் ஆக்கிரமித்து பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்னையிலிருந்து வரும் வாகனங்கள், பிரதான சாலையான போல்நாராயணன் தெரு வழியாக சீர்காழி நோக்கி செல்ல வேண்டும். இந்தச் சாலையில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் நடத்த மாவட்ட ஆட்சியர் தடை விதித்து, ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்த உத்தரவிட வேண்டும் என்கிறார் சமூக ஆர்வலர் பொ.பாலாஜிகணேஷ்.