பண்ருட்டியில் சனிக்கிழமை மாலை பைக் மீது லாரி மோதியதில் புதுப்பெண் உயிரிழந்தார்.
கடலூர், கோண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் அன்பு (29). கோழி இறைச்சிக் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், பண்ருட்டி ஒன்றியம், மாளிகம்பட்டு காலனியில் வசிக்கும் தட்சிணாமூர்த்தி மகள் கோமதி (23) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. புதுமணத் தம்பதியர் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக மாளிகம்பட்டு கிராமத்துக்கு வந்தனர்.
பண்ருட்டி கெடிலம் ஆற்றில் சனிக்கிழமை ஆற்றுத் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக அன்பு தனது மனைவி கோமதி, மைத்துனிகள் வெண்ணிலா(19), பார்வதி (15) ஆகியோரை பைக்கில் ஏற்றிக்கொண்டு வந்தார். பண்ருட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அலுவலகம் அருகே வந்தபோது, பின்னால் வந்த லாரி பைக் மீது மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கோமதி புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவர் உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த அன்பு புதுச்சேரி அரசு மருத்துவமனையிலும், வெண்ணிலா, பார்வதி ஆகியோர்
கடலூர் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து காடாம்புலியூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.