ஒருங்கிணைந்த நிதி, மனித வள மேம்பாட்டுத் திட்டத்தால் சுமார்
9 லட்சம் அரசுப் பணியாளர்கள் பயன் பெறுவர் என கருவூல கணக்குத் துறை சென்னை மண்டல இணை இயக்குநர் ஆர்.வெங்கட்ராமன் கூறினார்.
கருவூலத் துறையில் ஒருங்கிணைந்த நிதி, மனித வள மேம்பாட்டுத் திட்டம் தமிழக முதல்வரால் கடந்த 10-ஆம் தேதி தொடக்கி வைக்கப்பட்டது. இந்த நிலையில், கடலூர் மாவட்ட கருவூலத்தில், கருவூல கணக்குத் துறை சென்னை மண்டல இணை இயக்குநர் ஆர்.வெங்கட்ராமன் இந்தத் திட்டத்தை திங்கள்கிழமை தொடக்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:
நிதி மேலாண்மை தொடர்பான அரசுப் பணிகள் திறம்பட நடைபெறவும், கருவூலப் பணிகளை மேம்படுத்தும் பொருட்டும் தமிழக அரசு பிரத்தியேகமான வழிமுறைகளைக் கையாண்டு, மனிதவள மேலாண்மையை ஒருங்கிணைத்து, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. இதற்காக அரசு ரூ.288.91 கோடி ஒப்பளிப்பு செய்துள்ளது.
இந்தத் திட்டத்தில் மாநில கணக்காயர், பொது கணக்கு கட்டுப்பாட்டாளர், இந்திய ரிசர்வ் வங்கி, வருமான வரித் துறை, சரக்கு மற்றும் சேவை வலைதளம், முகமை வங்கிகள் ஆகிய பங்கேற்பாளர்கள் ஒருங்கிணைக்கப்படுவர். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழ்நாடு, புதுதில்லிக்கு சம்பள பட்டியல்களை உடனடியாக அனுப்பி பணியாளர்களுக்கு நேரடியாக சம்பளம் வழங்க முடியும். இதனால், கருவூலங்கள் காகிதமற்ற அலுவலகங்களாக மாற்றப்படுவது மட்டுமின்றி, சம்பளம் பெற்று வழங்கும் 29 ஆயிரம் அலுவலர்களின் பணிச் சுமையும் குறையும்.
தற்போதுள்ள நடைமுறைப்படி கருவூலத்தில் பட்டியல் சமர்ப்பித்த 6 முதல் 10 நாள்களுக்குப் பிறகே பயனாளர்களுக்கு வங்கிக் கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்பட்ட நிலையில், இது ஒரு நாளாகக் குறைந்துவிடும். இந்தத் திட்டம் மூலம் சுமார் 9 லட்சம் அரசுப் பணியாளர்களின் பணிப் பதிவேடு பராமரிப்பு பணியானது எளிமையான முறையில் கணினி மயமாக்கப்படுகிறது என்றார் அவர். நிகழ்ச்சியில் மாவட்ட கருவூல அலுவலர் கு.ராஜேந்திரன், கூடுதல் கருவூல அலுவலர் வி.மணிவண்ணன், உதவி கருவூல அலுவலர் க.சீ.பத்மினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.