வட கிழக்குப் பருவ மழை பொய்த்ததால், கடலூர் மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்கக் கோரி, சார் -ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கடலூர் மாவட்டத்தில் வட கிழக்குப் பருவ மழை 24 சதவீதம் (2018-19) குறைவாகப் பெய்துள்ளது. எனவே, விருத்தாசலம் நகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் வயலூர் ஏரியை என்எல்சியின் சமூகப் பொறுப்புணர்வு நிதியிலிருந்து ஆழப்படுத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.
விருத்தாசலம் - கடலூர் ரயில் பாதையில் மூடப்பட்ட வயலூர் ரயில்வே கடவுப் பாதையை மீண்டும் திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சனநாயக விவசாயிகள் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர், ஊர்வலமாகச் சென்று சார்- ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.
அந்தச் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் கே.கந்தசாமி தலைமையில், பாலக்கரை ரவுண்டானாவிலிருந்து ஊர்வலமாகச் சென்று, சார் -ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.
தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்க மாநிலப் பொருளாளர் கார்மாங்குடி எஸ்.வெங்கடேசன், சனநாயக விவசாயிகள் சங்க மாநில அமைப்பாளர் தே.ராமர் ஆகியோர் உரையாற்றினர். நிர்வாகிகள் கே.கிருஷ்ணமூர்த்தி, கு.பழனிசாமி, வி.அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.