கடலூர் மாவட்ட அளவிலான குத்துச் சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட அளவிலான குத்துச் சண்டைப் போட்டி நெய்வேலியில் அண்மையில் நடைபெற்றது. இதில் பண்ருட்டி அருகே உள்ள பணிக்கன்குப்பம் செயின்ட் பால் பப்ளிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியில், 65-70 கிலோ எடைப் பிரிவில் இந்தப் பள்ளி மாணவர் ஏ.ரித்திக், 51-56 கிலோ எடைப் பிரிவில் மாணவர் பி.அர்ஜுன், 28-30 கிலோ எடைப் பிரிவில் மாணர் கே.நித்திஷ் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர். இதன்மூலம் மாணவர்கள் மூவரும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றனர்.
இவர்களுக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளித் தாளாளர் கிருபாகரன் பங்கேற்று, தங்கப் பதக்கம் வென்ற மாணவர்களையும், பயிற்சியாளர் செல்வமணியையும் பாராட்டி பரிசளித்தார். பள்ளி முதல்வர் ஆர்.விஜயா, ஒருங்கிணைப்பாளர் நளினி, உடற்கல்வி ஆசிரியர் மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.