தெரு விளக்குகளை உடைத்ததாக மாணவர் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருக்கண்டேஸ்வரம் முதல் விஸ்வநாதபுரம் வரை சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், சுமார் 25 விளக்குகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக நெல்லிக்குப்பம் நகராட்சி ஆணையர் பிரபாகரன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில், நெல்லிக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இதில், வாழப்பட்டு பகுதியைச் சேர்ந்த சீத்தாராமன் மகன் கோவன்ராஜ் (21), ஞானவேல் மகன் முல்லைவேந்தன், கனகசபை மகன்கள் ராஜா (19), ரவி ஆகியோர் தெரு விளக்குகளை கல்வீசி உடைத்தது தெரிய வந்தது. இதையடுத்து, ஐடிஐ மாணவரான ராஜா, கோவன்ராஜ் ஆகியோரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.