காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க கடலூர் மாவட்ட கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் கடந்த 22-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணிக்குச் செல்லாததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, வேலைநிறுத்தப் போராட்டத்தை கூட்டமைப்பினர் கைவிட வேண்டும் என அரசு வலியுறுத்தியது. எனினும், போராட்டம் தொடர்வதால் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து பாடங்களை நடத்த அரசு தயாராகி வருகிறது.
மேலும், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக, கடலூரில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கா.பழனிச்சாமி தலைமையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களிடம் கல்வித் துறையின் விளக்கம் கோரும் நோட்டீûஸ வழங்க வேண்டுமென தலைமை ஆசிரியர்களிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால், தலைமை ஆசிரியர்கள் நோட்டீûஸ வாங்க மறுத்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்ததாவது: கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 6,900 ஆசிரிய, ஆசிரியைகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நோட்டீûஸ பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மூலமாக வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் நேரடியாக பள்ளிகளுக்கே அனுப்பி வைக்குமாறு தெரிவித்துவிட்டனர். எனவே, பள்ளிகளுக்கே நேரடியாக இந்த நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும். அதன்பின்னர், துறை ரீதியிலான நடவடிக்கைக்கான நோட்டீஸ் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.