சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, ராணி மெய்யம்மை செவிலியர் கல்லூரி இணைந்து நடத்திவரும் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 2-ஆம் கட்டமாக, மார்பகப் புற்றுநோய் கண்டறிதல் முகாம், அந்த நோய் தொடர்பான கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.
பல் மருத்துவம் மற்றும் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற மருத்துவ முகாம் மற்றும் கண்காட்சியை புல முதல்வர் டி.ராஜ்குமார் தொடங்கி வைத்தார். மருத்துவர்கள் கே.ராஜசிகாமணி, கரோலின் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மகப்பேறு பிரிவு மருத்துவர்கள் அர்ச்சனா, பிரியங்கா, ரூபா, சுசித்ரா ஆகியோர் பயனாளிகளுக்கு பரிசோதனை செய்து, விழிப்புணர்வு, சுய பரிசோதனை குறித்து விளக்கினர்.
ராணி மெய்யம்மை செவிலியர் கல்லூரி சார்பாக கல்லூரி முதல்வர் கரோலின் ராஜ்குமார் தலைமையில் துறை பேராசியர்கள், செவிலிய சமூக நலம் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு மாணவ, மாணவிகள் 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்காட்சியில் விளக்கமளித்தனர். பல் மருத்துவக் கல்லூரிசார்பாக பல் மருத்துவர்கள் சுமா கார்த்திகேயன், கல்யாணி, தீபாஸ்ரீ, கவிதா, ஜெயக்கொடி, மலர்க்கொடி, மேகலா, சுமதி, வர்ஷா, திவ்யா ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர்.