தேசிய கராத்தே போட்டியில் விருத்தாசலம் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.
தமிழ்நாடு, ராஜஸ்தான், பஞ்சாப், தில்லி ஆகிய மாநிலங்கள் பங்கேற்ற தேசிய கராத்தே போட்டி தில்லியில் அண்மையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சுமார் 1500 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில், தமிழ்நாடு அணி சார்பில் விருத்தாசலம் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்று விளையாடினர்.
ஜப்பான் ஷிட்டோ ரியோ கராத்தே பள்ளி நடத்திய இந்தப் போட்டியில், ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளியின் 7-ஆம் வகுப்பு மாணவர் கிருஷ்ணா இரண்டாம் இடமும், மாணவர் ஸ்ரீராம் 3-ஆம் இடமும் பெற்றனர். போட்டியில் வென்ற மாணவர்கள், அவர்களை வழிநடத்திய கராத்தே மாஸ்டர் கண்மணி ஆகியோருக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் சி.ஆர்.ஜெயசங்கர் தலைமை வகித்து மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கினார். பள்ளி
முதல்வர் அ.முருகன், துணை முதல்வர் ராஜகயல்விழி, நிர்வாக அலுவலர் ராமன் குமாரமங்கலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.