பயிற்சி ஆசிரியர்கள் மூலம் பள்ளிகளை இயக்க நடவடிக்கை: முதன்மைக் கல்வி அலுவலர்

கடலூர் மாவட்டத்தில் பயிற்சி ஆசிரியர்கள் மூலம் பள்ளிகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதன்மைக் கல்வி அலுவலர் கா.பழனிசாமி கூறினார்.

கடலூர் மாவட்டத்தில் பயிற்சி ஆசிரியர்கள் மூலம் பள்ளிகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதன்மைக் கல்வி அலுவலர் கா.பழனிசாமி கூறினார்.
 ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் நடத்தி வரும் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகளை திறக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதன்மை கல்வி அலுவலர் கா.பழனிசாமியுடன் பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் சுகன்யா ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
 ப.சரவணனை சந்தித்து ஆலோசித்தனர்.
 அப்போது மூடிகிடக்கும் அரசுப் பள்ளிகளை திங்கள்கிழமை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படியும், பள்ளிகளுக்கு பாதுகாப்பு வழங்கும்படியும் கேட்டுக் கொண்டனர்.
 இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் கூறியதாவது: அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிலையங்களில் படித்துக்கொண்டிருக்கும் பயிற்சி ஆசிரியர்களை வைத்து பள்ளிகளை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, காவல் துறை பாதுகாப்பை கேட்டுள்ளோம்.
 வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஒரு வாய்ப்பை அரசு வழங்கியுள்ளது.
 அதன்படி அவர்கள் திங்கள்கிழமை பணிக்கு வந்தால் எவ்வித நடவடிக்கையும் இருக்காது. பணிக்கு வராவிட்டால் அவர்கள் பணியிடங்கள் காலி பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு அந்த இடத்தில் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வர இருப்பதால் அந்த வழக்கை பொருத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
 ஆனால், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களின் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டு விட்டது. கடலூர் மாவட்டத்தில் 12 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இடத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். முதுகலை ஆசிரியர் பணிக்கு 1,398 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவற்றில் 640 விண்ணப்பங்கள் தகுதியானவை. பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 1,106 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 344 விண்ணப்பங்கள் மட்டும் தகுதியானவை. ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்களில் 305 விண்ணப்பங்கள் மட்டும் தகுதியானவை என்று அவர் கூறினார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com