இலவச வீட்டுமனைப் பட்டா கோரி குவியும் மனுக்கள்

அரசு அறிவிப்பின்படி இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, கடலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை திரளானோர் மனு அளித்தனர்.

அரசு அறிவிப்பின்படி இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, கடலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை திரளானோர் மனு அளித்தனர்.
 அரசு நத்தம் புறம்போக்கில் குடியிருந்து வருபவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என தமிழக முதல்வர் அண்மையில் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளானோர் வந்து மனு அளித்துச் சென்றனர். அதன்படி, கடலூர் வட்டம் திருமாணிக்குழி ஊரட்சி தி.புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுமார் 40 பேர் மனு அளித்தனர். அதில், தாங்கள் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்து வருவதாகவும், மின்சாரம், தண்ணீர் வரி, வீட்டு வரி உள்ளிட்டவை செலுத்தி வருவதாகவும், எனவே, தங்களுக்கு அந்த இடத்தை பட்டா மாற்றம் செய்துத்தர வேண்டுமென வலியுறுத்தினர்.
 இதேபோல, விருத்தாசலம் வட்டம், கெங்கைகொண்டான் ஓம்சக்தி நகரைச் சேர்ந்தவர்களும் மனு அளித்தனர். அதில், சுமார் 500 குடும்பங்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக குடிசை வீடு கட்டி அரசு புறம்போக்கில் வசித்து வருகின்றனர். தற்போது, என்எல்சி நிர்வாகம் இந்த பகுதியை காலி செய்யுமாறு நோட்டீஸ் வழங்கி வருகிறது. இதுதொடர்பாக விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இடத்தை காலி செய்துக் கொடுத்தால் ஆலடி, பாலக்கொல்லை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தருவதாகக் கூறுகிறார்கள்.
 எனவே, மாவட்ட நிர்வாகம் இதுதொடர்பாக விசாரணை நடத்தி தங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புக்கு பதிலாக தனித் தனி இடமாக வழங்க வேண்டும். வீடு கட்டுவதற்கான இழப்பீட்டுத் தொகையும் பெற்றுத்தர வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com