தேசிய நெடுஞ்சாலைப் பணிக்கு கையகப்படுத்தும் நிலத்துக்கு கூடுதல் இழப்பீடு கோரி மாவட்ட ஆட்சியர் அலுலவகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கோ.மாதவன், ரமேஷ்பாபு ஆகியோர் தலைமையில் புவனகிரி வட்டம் கொத்தட்டை, அத்தியாநல்லூர், வேளங்கிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், கொத்தட்டை ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் நெடுஞ்சாலை அமைப்பதற்கு தேவையானதை விட கூடுதலாக நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இந்த நிலம் அனைத்தும் விளை நிலங்களாகும். இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது. சில வீடுகளில் பாதி வீடும், மனையில் பாதியும் கையகப்படுத்தப்படுகிறது. இதனால், மாற்று வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கையகப்படுத்தும் நிலத்துக்கு சந்தை மதிப்பை விட மிகக் குறைவான பணமே வழங்கப்படுகிறது. குடியிருக்கும் வீடு, விவசாயம் செய்யும் நிலம் ஆகியவற்றை இழந்து தவிப்பவர்களுக்கு குறைவான இழப்பீடு என்பதை ஏற்க முடியாது. எனவே, கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரியுள்ளனர்.