பண்ருட்டி அருகே செயல்பட்டு வரும் அரசு மணல் குவாரியை மூடக் கோரி, பிப்.2-ஆம் தேதி அனைத்துக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
பண்ருட்டி வட்டம், எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி இயங்கி வருகிறது. மணல் குவாரியால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம், குடிநீருக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் எனக் கூறி, மணல் குவாரியை மூட வேண்டி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனால், அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது.
இதுதொடர்பாக விவாதிக்க, பண்ருட்டி, தட்டாஞ்சாவடியில் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டத் தலைவர் சுரேந்தர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அங்குசெட்டிப்பாளையம் அருகே அரசு சேமிப்புக் கிடங்கு இயங்கி வருகிறது. இங்கிருந்து அனுமதி, ரசீது இல்லாமல் தினம்தோறும் 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மணல் எடுத்துச் செல்லப்படுகிறது. முறைகேடாக மணல் விற்பனை செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனை வலியுறுத்தி பிப்.2-ஆம் தேதி அனைத்துக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றினர்.
கூட்டத்தில், திமுக மாணவரணி அமைப்பாளர் தென்னரசு, மதிமுக ஒன்றியச் செயலர் எஸ்.கே.வெங்கடேசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வேங்கிடசாமி, இந்திய கம்யூனிஸ்ட் சக்திவேல், இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் தேவா, பாஜக செல்வகுமார், காங்கிரஸ் கட்சி ஏகாம்பரம், மக்கள் பாதுகாப்பு கவசம் ஒருங்கிணைப்பாளர் தட்சிணாமூர்த்தி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெங்கடேசன், தேமுதிக தெய்வீகதாஸ் ஆசியோர் கலந்து சொண்டனர்.