நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி சுரங்க நீரில் தவறி விழுந்த அதிகாரி, அதில் மூழ்கி உயிரிழந்தார்.
நெய்வேலி, வட்டம் 12-இல் வசித்து வந்தவர் ராஜலிங்கம் (படம்) (59). இவர் என்எல்சி முதலாவது சுரங்க விரிவாக்க உற்பத்திப் பிரிவில் துணைப் பொது மேலாளராகப் பணியாற்றி வந்தார். நாமக்கல் மாவட்டம், புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இவருக்கு மனைவி, இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில், ராஜலிங்கம் புதன்கிழமை காலை வழக்கம்போல பணிக்குச் சென்றார். நிலக்கரி வெட்டி எடுக்கும் பகுதியில் தேங்கியிருந்த தண்ணீரை மற்றொரு பகுதிக்கு பிற்பகலில் திறந்து விடப்பட்டதாம். அப்போது, தண்ணீரின் ஓட்டத்தால், மண் அரிப்பு ஏற்பட்டு கரை மேல் நின்றிருந்த ராஜலிங்கம் தண்ணீரில் விழுந்து மூழ்கினார். இதைக் கண்ட சக ஊழியர்கள் சப்தமிட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படை வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் தேடலுக்குப் பின்னர் அவரை மீட்டு, என்எல்சி பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். உயிரிழந்த ராஜலிங்கத்தின் உடல் என்எல்சி பொது மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. பணி ஓய்வு பெற மூன்று மாதங்களே உள்ள நிலையில், அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சக ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.