கடலூரில் நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் 567 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
தமிழக அளவில் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கில் மாவட்டந்தோறும் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் கடந்த 28- ஆம் தேதி முதல் 30 -ஆம் தேதி வரை மூன்று நாள்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், குழு, தடகளம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
முதல் நாளில் ஆண்களுக்கும், 2 -ஆம் நாளில் பெண்களுக்குமான நீச்சல், கூடைப்பந்து, கையுந்துப்பந்து, கபடி, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, பூப்பந்து, பளுதூக்குதல் டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகளும், புதன்கிழமை இருபாலருக்குமான தடகளப் போட்டிகளும் நடைபெற்றன.
மூன்று நாள்களிலும் மொத்தம் 1,820 வீரர் }வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் மா.ராஜா தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராஜகிருபாகரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று வெற்றி பெற்ற 567 வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுக் கோப்பை, சான்றிதழ்களை வழங்கினார். மேலும், வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை ரூ. 4.25 லட்சம் அவரவரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. தடகளத்தில் முதலிடம் பெற்றவர்கள், குழுப் போட்டியில் சிறப்பிடம் பெற்றவர்கள் கடலூர் மாவட்டம் சார்பில், மாநில அளவிலான முதல்வர் கோப்பைப் போட்டிகளில் பங்கேற்பர் எனத் தெரிவிக்கப்பட்டது.