பேருந்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
கடலூர் சாவடியைச் சேர்ந்தவர் வடிவேல் பிள்ளை மனைவி இந்திரா (70). இவர் 2014-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 10 ஆம் தேதி கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் நடந்து சென்றார். அப்போது, அந்த வழியாகச் சென்ற தனியார் பேருந்து அவர் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர், கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 14- ஆம் தேதி இறந்தார்.
இதுகுறித்து கடலூர் புதுநகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கடலூர் குற்றவியல் நீதித் துறை நடுவர் எண். 2 நீதிமன்றத்தில் நீதிபதி அன்வர்சதாத் முன்னிலையில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் பேருந்தை அஜாக்கிரதையாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், சி.மெய்யூரைச் சேர்ந்த சா.பாலுவுக்கு (48) இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி புதன்கிழமை தீர்ப்பளித்தார்.