கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பொதுமக்கள் தரப்பில் 333 மனுக்கள் அளிக்கப்பட்டன. தொடர்ந்து, தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் மூலம் 47 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.5 லட்சத்தில் திருமண உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, இயற்கை மரணம், ஈமச் சடங்கு உதவித் தொகை ஆகியவை வழங்கப்பட்டன.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் முஸ்லிம் மகளிர் 51 பேருக்கு ரூ.7 லட்சத்தில் சிறுதொழில் கடனுதவி, கல்விக் கடன் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை மற்றும் திருமண உதவித் தொகை ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 8 பேருக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகளையும் ஆட்சியர் வழங்கினார்.