மடிக் கணினி கோரி மாணவிகள் ஆர்ப்பாட்டம்

கடலூரில் விலையில்லா மடிக் கணினி வழங்கக் கோரி, மாணவிகள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூரில் விலையில்லா மடிக் கணினி வழங்கக் கோரி, மாணவிகள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு விலையில்லா மடிக் கணினிகளை வழங்கி வருகிறது. இதன்படி, கடலூர் மாவட்டத்தில் 2018-19 மற்றும் 2019-20-ஆம் கல்வி ஆண்டுகளைச் சேர்ந்த சுமார் 60 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக் கணினிகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.
 கடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத் மாணவ, மாணவிகளுக்கு மடிக் கணினிகள் வழங்கும் பணியை தொடக்கி வைத்தார்.
 இந்த நிகழ்வில், 2017-18-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்து முடித்து தற்போது கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்கள் சிலர், தங்களுக்கு விலையில்லா மடிக் கணினி இதுவரை வழங்கப்படவில்லை என புகார் கூறினர்.
 இந்த நிலையில், அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு திங்கள்கிழமை மடிக் கணினிகள் வழங்கப்பட்டன.
 இதையடுத்து, 2017-18-ஆம் கல்வியாண்டைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், தாங்கள் ஏற்கெனவே பிளஸ்2 படித்த பள்ளிகளுக்குச் சென்று தங்களுக்கு மடிக் கணினி வழங்கப்படாதது குறித்து புகார் தெரிவித்தனர்.
 கடலூரில் புனித.அன்னாள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிலர் பள்ளி முன் திரண்டு தங்களுக்கு உடனடியாக மடிக் கணினிகள் வழங்க வேண்டுமென வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
 இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர்தான் முடிவெடுக்க வேண்டுமென அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவிகள் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்குச் சென்று கோரிக்கை மனு அளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com