கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகிற 19-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
ஒவ்வொரு மாதமும் 3-ஆவது வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நிகழ் ஜூலை மாதத்துக்கான கூட்டம், வருகிற 19-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில், மாவட்டத்திலுள்ள விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.
கூட்டத்தில் பேச விரும்புவோர், கூட்டம் நடைபெறும் நாளன்று காலை 10.30 மணிக்கு முன்பாக தாங்கள் பேச உள்ள துறையின் விவரம் குறித்து பதிவு செய்துகொள்ள வேண்டும். கூட்டத்தில் பேச வாய்ப்பு கிடைக்காதவர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம்.
இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறையினரிடமிருந்து பதில்கள் பெறப்பட்டு அதுகுறித்த விவரம் அடுத்த கூட்டத்தில் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும். எனவே, இந்தக் கூட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.