கடலூர் அருகே காரில் சாராயம் கடத்தியவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கடலூர் மதுவிலக்கு பிரிவு உதவி ஆய்வாளர் சு.பிரசன்னா, தலைமைக் காவலர் ஜ.ஜெஸ்டின் பிரபாகரன் உள்ளிட்டோர் மதுக் கடத்தலை தடுக்கும் வகையில் ரோந்துப் பணியில்
செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். அப்போது, உச்சிமேட்டில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்த காரை சோதனையிட்டனர். அதில், 20 சாக்கு மூட்டைகளில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 1,200 லிட்டர் புதுவை மாநில சாராயம் இருந்தது தெரியவந்தது.
அந்தக் காரிலிருந்த புதுவை, அரியாங்குப்பத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் மணிகண்டன் (36) என்பவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், கடத்தல் சாராயம், காரை போலீஸார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.