தேர்வு எழுதிய நெய்வேலி ஜவஹர் மேல்நிலைப் பள்ளி மாணவர்களில் 45 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இந்தப் பள்ளியில் மத்திய பாடத் திட்டத்தின்கீழ் வகுப்புகள் நடத்தப்படுவதுடன், ஐஐடி நுழைவுத் தேர்வு, நீட் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் அளிக்கப்பட்டு வருகிறது.
நிகழாண்டு இந்தப் பள்ளி மாணவர்கள் 58 பேர் நீட் தேர்வு எழுதினர்.
இவர்களில் 45 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். இவர்களில் மாணவர் லோக்கேஷ், 720-க்கு 573 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார்.
மேலும், 7 பேர் 500 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 25 பேர் 400 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும் பெற்று தமிழகத்தின் பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு இந்தப் பள்ளி மாணவர்களில் 28 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். அவர்களில், 18 பேருக்கு தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயில வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.