பள்ளி வாகனங்களை ஓட்டுபவர்கள் சாலை விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என போக்குவரத்து போலீஸார் அறிவுரை வழங்கினர்.
பள்ளிகள், கல்லூரிகள் தொடங்கியுள்ள நிலையில், கல்வி நிறுவனங்களுக்கு வாகனங்களை இயக்குபவர்களுக்கான ஒழுக்கக் கட்டுப்பாடுகள் குறித்து விளக்குவதற்காக கடலூர் போக்குவரத்துக் காவல் துறை சார்பில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக சுமார் 50 தனியார் வாகனங்கள் மஞ்சக்குப்பம் மைதானத்துக்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டு அவற்றின் சான்றிதழ்கள், ஓட்டுநர்களின் சான்றிதழ்களை போக்குவரத்து காவல் ஆய்வாளர் அப்பாண்டை ராஜ், காவல் உதவி ஆய்வாளர்கள் சதீஷ்குமார், மகாலிங்கம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் அவர்கள் ஓட்டுநர்களிடம் கூறியதாவது: சாலை விதிகளை முறையாகக் கடைப்பிடித்து வாகனங்களை இயக்க வேண்டும். வாகனத்தில் மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்வதால் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தியிருப்பதுடன், சீரான வேகத்தில் செல்ல வேண்டும். ஒழுங்கீமான செயல்களில் ஈடுபடுவதோ, வாகனத்தில் சமுதாயத்துக்கு கேடான பாடல்களையோ ஒலிபரப்புவதோ கூடாது என அறிவுரை வழங்கினர்.